பெண் போலீசுக்கு பாராட்டுகள்! தாலியை கணவனிடம் கழற்றி கொடுத்த மாணவி...   நீட் தேர்வு பரிதாபங்கள்!

க.பாலகுரு,

    கட்டிய தாலியை கணவனிடம் கழட்டி கொடுத்துவிட்டு நீட் தேர்வு எழுத சென்ற மாணவி- மூக்குத்தி, மெட்டி, கொலுசு ஆகியவற்றை கடினப்பட்டு பெற்றோரிடம் கழட்டி கொடுத்து விட்டு சென்ற மாணவிகள்

   இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 2025-26 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று திருவாரூர் மாவட்டம் நீலக்குடி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. மொத்தம் மூன்று மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 1481 மாணவ மாணவிகள் எழுதினர்.

  காலை 11 மணி முதல் மாணவ மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்படும் நிலையில் இறுதி நேரமான 1:30 மணிக்கு அவசர அவசரமாக வந்த மாணவி ஒருவர் தன்னுடைய தாலியை கணவனிடம் கழட்டி கொடுத்துவிட்டு வேக வேகமாக நீட் தேர்வு எழுத சென்றார்.

   இதேபோல கொலுசு, மெட்டி, தோடு, மூக்குத்தி உள்ளிட்டவற்றை மாணவிகள் கழற்ற முடியாமல் அவதிப்பட்டு கழட்டி கொடுத்து விட்டு சென்றனர்.

   நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள் மற்றும் அவர்களோடு கூட வந்த உறவினர், பெற்றோர்களில் பலரும்  தேசிய தேர்வு முகமை முறையான முன்னேற்பாடுகள் செய்யாததால் கடும் அவதி அடைந்தனர்.

   திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளே சென்ற பிறகு அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் காத்திருக்கவும் உணவு அருந்தவும் தேசிய தேர்வு முகமை செய்துள்ள ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை.

   பலர் வெயிலில் காத்திருந்தனர். பலர் ஒதுங்க  நிழல் கூட இல்லாமல் வெற்றாற்றில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தில் வெயிலில் அமர்ந்தனர்.

  கேந்திரியா வித்யாலயா பள்ளியில் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் உள்ளே ஒரு கிலோமீட்டர் நடந்தே செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அங்கு முறையான வாகன ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. போட்டிருக்கும் சாமியான பந்தல் போதுமான அளவிற்கு இல்லை. தேர்வு எழுதி மாணவர்களும் மாணவிகளும் வெளியே வரும் வரை கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் உறவினர்களும் கடுமையான அவதி அடைந்தனர்.

  திருப்பூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உடையில் இருந்த பட்டன்கள் வெட்டி அகற்றம்!

மற்றொரு மாணவி ஒருவரின் சுடிதாரில் அதிகளவு பட்டன் இருந்ததால் அனுமதி மறுப்பு; தக்க நேரத்தில் கடைக்கு அழைத்துச் சென்று வேறு உடை வாங்கிக்கொடுத்து தேர்வு எழுத உதவிய பெண் போலீஸுக்கு குவிந்தது பாராட்டு..!!